ஆண்டிபட்டி, பிப்.13: ஆண்டிபட்டி அருகே நேற்று முன்தினம் சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கலால்துறையினர் ஆளும் கட்சியினரின் பாருக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் அரசு மதுபானக்கடை எண் 2619க்குரிய பார் உள்ளது. இந்த பாரில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கலால் துறையினருக்கு ரகசிய போன் தகவல் வந்தது. இதன் அடிப்படையில் தேனி மாவட்ட கலால்உதவி ஆணையர் ராஜா தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 52 மது பாட்டில்களை மறிமுதல் செய்தனர். இதனையடுத்து அரசு விதிகளை மீறி பார் நடத்தியதால் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கலால் உதவி ஆணையர் ராஜா பாருக்கு சீல் வைத்தார்.மேலும் இது சம்பந்தமாக கலால் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் 52 பாட்டில்களை பெற்றுக்கொண்டு, வழக்கு பதிந்து அரசு அனுமதியின்றி விற்பனை செய்த கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் பாண்டி (36) என்பவரை கைது செய்தனர்.