ராமநாதபுரம், பிப்.13:பள்ளிகளில் மாணவர்கள் கல்வியுடன் உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட்டு மைதானமும் அமைத்து கொடுக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பராமரிக்க படுவதில்லை. தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த விடுவதில்லை. அதற்கு பதிலாக மாணவர்களை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் அருகிலேயே விளையாட்டு மைதானமும் உள்ளது. மைதானம் புல் பூண்டு வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. கூடைப்பந்து மைதானத்தில் உள்ள உபகரணம் துருப்பிடித்து உடைந்து கிடக்கிறது. அதனால் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே பள்ளி நிர்வாகம் விளையாட்டு மைதானத்தை சரி செய்து, மாணவர்களை விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கருவேல மரங்கள் வளர்ந்தும், புதர் மண்டியும் கிடந்தது. தற்போதுதான் கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். ஆனால் அந்த முட்கள் விளையாட்டு மைதானத்திலேயே கிடக்கின்றன. விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த குமரேசன் கூறுகையில், பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்களின் வருகை குறைந்து வருகிறது. இதனால் நாளடைவில் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது உள்ள ஆர்வமே குறைந்து விடும். விரைவில் இதை சரி செய்து மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.