அஞ்சுகிராமம் அருகே பரபரப்பு கட்டிட தொழிலாளி கொலை? கால்வாயில் சடலமாக மீட்பு

அஞ்சுகிராமம், பிப்.13:  அஞ்சுகிராமம் அருகே மாயமான தொழிலாளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அஞ்சுகிராமம் அருகே மயிலாடி சுப்பிரமணிய புரம் காலனியை சேர்ந்தவர் சபரி சரவணன்(21). கட்டிட தொழிலாளி. கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த வித தகவலும் இல்லை. தொடர்ந்து உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் ஒரு சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பொது மக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் மாயமான சபரி சரவணன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கடந்த 2 நாட்களாக தண்ணீரில் கவிழ்ந்த நிலையிலேயே இறந்து கிடந்ததால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. கண், வாய், மூக்கு பகுதிகளை மீன்கள்  தின்றுள்ளன. இதனால் முகம் விகாரமாக காட்சியளித்தது. அதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக சபரி சரவணனின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ேமலும் சரவணனுக்கு வேறு யாருடனாவது முன் விரோதம் உண்டா? என்பது குறித்தும் அவர் கொலை செய்யப்பட்டாரா?, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எனவும் பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: