திமுக பிரமுகர் கொலையில் 4 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்

பெரும்புதூர், பிப்.13: பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி.

நேற்று முன்தினம், பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் தலைமையில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின், பெரும்புதூரில் மதியம் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் ரமேஷ் கலந்து கொண்டார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் ரமேஷ், பெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு ரமேஷ் சென்றார். அங்கு வரவு, செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், ரமேஷை சரமாரி வெட்டி கொன்றுவிட்டு தப்பியது.

புகாரின்படி பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரித்தனர். அதில், பெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும்  அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதையறிந்த குல்லா (எ) விஸ்வநாதன் (24),  சுரேந்தர் (25), சத்யா (27), செந்தில்குமார் (28) ஆகியோர் திருச்சி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது, எதற்காக கொலை நடந்தது, தொழில் போட்டியா, அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். மேலும், இதில் உள்ள முக்கிய குற்றவாளி யார் என்பதும் தெரியும் என்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய செயலாளர் கோபால்  ஆகியோர் கொலை செய்யப்பட்ட ரமேஷ் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது மனைவி மாரி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Related Stories: