தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தால் விபத்து அபாயம்

தாம்பரம், பிப்.13: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் மகளிர் பள்ளி அருகில் அந்தோணி தெரு, சாலமன் தெரு, கம்பர் தெரு, சுந்தர்ஸவரர் கோயில் தெரு, பாபுஜி தெரு, சக்கரவாதி தெரு உள்பட ஏராளமான தெருக்கள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லுவதற்கு கால்வாய் வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து தாம்பரம் நகராட்சி சார்பில், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சாலையில் மெகா பள்ளத்தை நகராட்சி ஊழியர்கள் தோண்டினர். பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. அந்த பள்ளத்தையும் முடவில்லை.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில்  பள்ளிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தம், கல்லூரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பணிக்காக வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதைெயாட்டி அடிக்கடி பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.மேலும் அந்த சுற்றுவட்ட பகுதிகளில் 3 தனியார் பள்ளிகள், 2 அரசு பள்ளிகள்  உள்ளதால் மாலை நேரங்களில் அங்கு பஸ்சுக்காக 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து காத்துக்கிடக்கின்றனர்.

இதனால் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் தினமும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலின்போது பள்ளி மாணவ, மாணவிகள் அங்கு தோண்டி கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. நகராட்சி சார்பில் கழிவுநீர் செல்வதற்காக தேண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடவேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உடனடியாக மேற்கண்ட பகுதியில் உள்ள மெகா பள்ளத்தை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: