வெவ்வேறு சம்பவங்கள் வாகன விபத்தில் 2 பேர் பலி

ஆலந்தூர், பிப்.13: ஆலந்தூர்  அடுத்த புழுதிவாக்கம்  யோகேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் எட்வர்டு. இவரது மகன் ரோகன் அந்தோணி சாமுவேல் (20). பெத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி பிஎஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் ரோகன், கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க  பைக்கில் புறப்பட்டார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் மீது வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட ரோகன்,  40 அடி உயரத்தில் இருந்து கீழே  விழுந்தார். இதில் அவரது மார்பு பகுதியில்  பலத்த காயம் ஏற்பட்டது.தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோகன் இறந்தார்.

 இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  விசாரிக்கின்றனர்.வேளச்சேரி தரமணி அடுத்த களிக்குன்றம், திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவர்மன்  (17). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிவர்மன், பைக்கில் களிக்குன்றம் பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், திடீரென தாறுமாறாக ஓடி, அங்குள்ள சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த மணிவர்மன் படுகாயமடைந்து மயங்கினான். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்படி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: