திருத்தணி, பிப். 13: திருத்தணி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வீடுகளை இடித்தால் தீக்குளிப்போம் என கூறினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். திருத்தணி அடுத்த அமிர்தாபுரத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 16 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில் திருத்தணி வனச்சரகர் பாஸ்கர், வனவர் சுந்தர், காப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர், அமிர்தாபுரத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்து, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என 16 குடும்பத்தினருக்கும் எச்சரிக்ைக நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை என தெரிகிறது.