சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கீச்சலம் ஊராட்சி, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). இவர், கீச்சலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ம்தேதி சரிதா திடீரென மாயமானார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, பொதட்டூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 10ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் நாயுடுவின் கரும்பு தோட்டத்துக்கு அருகேயுள்ள கால்வாய் கரையில் சரிதாவின் எலும்புக்கூடு, செருப்பு, கிழிந்த நிலையில் பள்ளி சீருடை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மாணவியின் எலும்பு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இவற்றை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.