சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி வாகை சந்திர சேகர்(திமுக) பேசியதாவது: பிராட்வே, திருவான்மியூர், கோயம்பேடு பகுதியில் இருந்து வேளச்சேரி காந்தி சிலை வரை மீண்டும் பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவான்மியூர் பஸ் நிலையம் மற்றும் பணிமனை 2.93 ஏக்கர் அளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து தான் சென்னை நகருக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர் பஸ் நிலையம் 4 அடி பள்ளத்தில் உள்ளது. மழைக்காலத்தில் பஸ்நிலையத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்கு கழிவறை வசதி இல்லை. பேருந்து நிலையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு, பச்சிளங்குழந்தைகளை பராமரிப்பதற்கான அறை இல்லை. எனவே பஸ் நிலையத்தை மேம்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.