புழல்: புழல் அண்ணா நினைவு நகர் கடைவீதி, புனித அந்தோணியார் நகர், கன்னடபாளையம், காவாங்கரை கண்ணப்ப சாமி நகர், திருவள்ளுவர் தெரு, திருவீதி அம்மன் கோவில் தெரு, லட்சுமி அம்மன் கோயில் தெரு, திருப்பூர் குமரன் தெரு, மேட்டு தெரு, அம்பேத்கர் தெரு, என்எஸ்கே காந்தி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சியாக இருந்த போது குடிநீர் பிரச்சினை தீர்க்க ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தட்டுப்பாடின்றி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் முன்பு பேரூராட்சியாக இருந்த இந்தப் பகுதி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட தண்ணீர் பம்புகள் பல இடங்களில் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது.