தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வில் குளறுபடி என புகார்

விருதுநகர், பிப். 12: விருதுநகர் அருகே, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வில் குளறுபடி என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் அருகே, மீசலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடந்தாண்டு மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஒருவரின் மனுவை, அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச்சில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பளித்த ஐகோர்ட் கிளை, ‘ரத்து செய்யப்பட்டவருடைய மனுவைப் பெற்று, மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் அதிகாரி மனு பெற மறுக்கிறார் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து தேர்தல் அதிகாரி குருபரனிடம்  கேட்டபோது, ‘11 நிர்வாக உறுப்பினர்களில், 5 பேர் மட்டும் தனிப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாக்கியுள்ள 6 பேர் பொதுப்பட்டியலில் உள்ளனர். இவர்களுடன் வழக்கு தொடுத்தவரை மட்டும் சேர்த்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (நேற்று) மாலைக்குள் ஒட்ட வேண்டும் என எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்த மற்றவர்கள் மீண்டும் மனு செய்ய அவசியம் இல்லை. சென்ற முறை தாக்கல் செய்த மனு  போதுமானது’ என்றார்.

Related Stories: