மதுரை, பிப். 12: இளம் சிறார்கள் போதை பொருளுக்கு அடிமையாவது வேதனையாளிக்கிறது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.சமூகபாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இளைஞர் நீதி குழுமம் இணைந்து, இளஞ்சிறார்கள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார்.கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், ‘இளம் சிறார்கள் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. அவர்கள் அதில் இருந்து விடுபட தேவையான பயிற்சி, விழிப்புணர்வு மறுவாழ்வு கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது’ என்றார். இளைஞர் நீதிக்குழும தலைவர் நீதிபதி காயத்திரிதேவி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘குழுமத்தில் பதிவாகும் வழக்குகளில் 80 சதவீத வழக்குகள் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதினாலேயே குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக உள்ளது. அவர்களை மீட்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து பேரணி நடந்தது. முடிவில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.