காரைக்குடி, பிப். 12: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் 40 சதவீத விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என சாலை பாதுகாப்பு கண்காட்சியில் மாணவர்கள் விளக்கினர்.காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் போக்குவரத்து துறை, காவல்துறை, லயன்ஸ் சங்கம் மற்றும் சாலை பாதுகாப்பு படை சார்பில் சாலை பாதுகாப்பு கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்திய மூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 முருகன், வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன், லயன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன், போக்குவரத்து காவல் நிலைய மகபுபாட்ஷா, சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன், லயன்ஸ் வட்டார தலைவர் சேவுகன், லயன்ஸ் சங்க தலைவர் சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அசோகன் நன்றி கூறினார்.கண்காட்சியில் சாலை விதிகளை மதிப்பது. குண்டும் குழியுமான சாலைகளால் ஏற்படும் விபத்துகள், சாலைகளில் மேம்பாலம் அமைப்பது, அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை டோல்கேட்டில் அனுமதிக்காமல் இருப்பதற்கான வழிமுறை உள்பட பல்வேறு வடிவங்களை மாணவர்கள் செய்திருந்தனர்.எஸ்எம்எஸ்வி பெண்கள் பள்ளி மாணவிகள் நந்தினி, நாகசெல்வி ஆகியோர் கூறுகையில், குடிபோதையில் வாகன ஓட்டுவதால் 40 சதவீத விபத்துகளும், அதிக வேகத்தால் 4 சதவீதம், கார் வெடிப்பதால் 16 சதவீதம், விதிமுறை மீறுவதால் 15 சதவீதம், ஹெல்மெட் அணியாததால் 5 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. இந்திய அளவில் விபத்துகளில் டாப் 10 மாநிலங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் 1 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இறந்து போகின்றனர் என புள்ளி விபரங்களை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.