வேலூர், பிப். 8: வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.வேலூர் மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்றும், இன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. பணியில் சேர வயது வரம்பு 18 முதல் 50 வரையிலும், கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று எஸ்பி பிரவேஷ்குமார் அறிவித்திருந்தார்.அதன்படி, விண்ணப்பங்களை வாங்க வாணியம்பாடி, திருப்பத்தூர், அரக்கோணம் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து நேற்று அதிகாலை 5 மணி முதலே ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வரத்தொடங்கினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் காலை 11 மணியளவில் அலுவலக வளாகம் முழுவதும் இளைஞர்கள் நிரம்பியிருந்த நிலையில் சாலையில் குவிந்திருந்தனர்.