போளூர், பிப்.7: போளூர் மக்களின் நீண்ட நாள் கனவான ரயில்வே மேம்பாலம் பணி ₹17.37 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மாற்று வழி அமைக்கும் பணி வருவாய்த்துறை சார்பில் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. இதில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டி புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். அப்போது, அதன் மாதிரி வரை படத்தை காண்பித்து மேம்பாலம் 64.8 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் உள்ளதாக அதிகாரிகள் விளக்கினர். மேலும், 18 மாதத்திற்குள் பணியை முடிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது, போளூர் அனைத்து வியாபாரி சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் ரயில்வே கேட்டு மூடப்பட்டு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நகரில் இருந்து உள்ளே, வெளியே செல்ல இருக்கும் ஒரு பாதையும் அடைக்கப்பட்டுள்ளதால் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வர ஏதுவாக மாற்று பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.