₹14 லட்சம் மோசடி செய்தவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது அரசு வேலை வாங்கி தருவதாக

திருவண்ணாமலை, பிப்.7: அரசு வேலை வாங்கி தருவதாக ₹14 லட்சம் மோசடியில் ஈடுபட்டு, 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்(34), லாரி டிரைவர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் தி.அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாசம்(46) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிரகாசம் மூலம் போளூர் தாலுகாவை சேர்ந்த டோமினிக், செஞ்சி தாலுகாவை சேர்ந்த சிவசங்கரன் மற்றும் காளி ஆகிய 3 நபர்களின் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், டோமினிக், சிவசங்கரன், காளி ஆகியோருக்கு சென்னை தலைமை செயலகத்தில் பழக்கம் உள்ளதாக பிரகாசம், சந்ேதாஷிடம் கூறினாராம். இதையடுத்து சந்தோஷ், அவரது உறவினர்கள் ராமகிருஷ்ணன், தனபால் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ₹14 லட்சம் வாங்கிக் கொண்டு, அந்த பணத்தை டோமினிக், சிவசங்கரன், பிரகாசம், காளி ஆகியோரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் 4 பேரும் சொன்னபடி அரசு வேலை வாங்கித்தரவில்லையாம்.

இதுகுறித்து சந்தோஷ் கடந்த 2015ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டோமினிக், சிவசங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். காளி ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதில் தலைமறைவாக இருந்த பிரகாசத்தை போலீசார் ேதடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அத்திப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரகாசத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Related Stories: