ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தங்கை உள்பட 3 பேருக்கு சரமாரி வெட்டு

ஊத்தங்கரை, ஜன.22: ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தங்கை உள்பட 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பூசாரிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நடேசன்-லட்சுமி தம்பதிக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. லட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது நினைவு நாளையொட்டி, மகள் கன்னியம்மாள், அவருடைய கணவர் கோவிந்தராஜ்(45), இவருடைய சகலை சுப்ரமணி(40) ஆகியோர் நேற்று பூசாரிக்கொட்டாய் வந்தனர்.

நடேசனின் மகன் மாயக்கண்ணனுக்கும், தங்கை கன்னியம்மாளுக்கும் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக தகராறு உள்ளது. இதனால் தாயின் நினைவு நாளுக்கு ஊருக்கு வந்த கன்னியம்மாள் உள்ளிட்டோரை, மாயக்கண்ணன் தடுத்துள்ளார்.இதில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாயக்கண்ணன், அரிவாளால் கன்னியம்மாளை வெட்டினார். இதை தடுக்க வந்த கோவிந்தராஜையும் வெட்டினார்.

அப்போது குறுக்கே வந்த சுப்ரமணிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 3 பேரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கோவிந்தராஜ், கன்னியம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சுப்ரமணி சிங்காரப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, மாயக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: