தா.பேட்டை, ஜன.22: முசிறி அடுத்துள்ள நாச்சம்பட்டியில் தெருவில் ஓடும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
முசிறி அடுத்துள்ள நாச்சம்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே திறந்த வெளியில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறும்போது, குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியின் அருகே திறந்த வெளியில் கழிவுநீர் ஓடுவதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அவ்வப்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கழிவு நீர் மழைநீரோடு கலந்து தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியால் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீர் செல்வதற்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.