6 கிலோ மான்கறி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

திருவில்லிபுத்தூர், ஜன. 22:  திருவில்லிபுத்தூர் அருகே, வீட்டில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ மான் கறியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, இடையன்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் (34). இவரது வீட்டில் மான் கறி மறைத்து வைத்திருப்பதாக, மம்சாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், முருகேசன் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த முருகேசன், ராஜபாளையம் மருதுநகரைச் சேர்ந்த ஜெயமுருகேசன் (21), விக்னேஸ்வரன் (23) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் நான்கு கேன்களில் இருந்த 6 கிலோ மான் கறியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், ‘ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் உள்ள முடங்கியார் பாலம் அருகே மானை வேட்டையடி கறியை வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் மானை கண்ணி வெடி வைத்து பிடித்தார்களா அல்லது வேட்டையாடினார்கள் என விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருவில்லிபுத்தூர் அருகே, வீட்டில் 6 கிலோ மான் கறி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: