ரெட்டியபட்டி டூ திருச்சுழி டவுன் பஸ் இயக்க கோரிக்கை

திருச்சுழி, ஜன. 22: ரெட்டியபட்டியிலிருந்து கல்லுமடம் வழியாக திருச்சுழிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சுழி அருகே ரெட்டியபட்டி உள்ளது. இங்கிருந்து திருச்சுழிக்கு செல்லும் வழித்தடத்தில் கல்லுமடம், கல்யாணசுந்தரபுரம், ஆலடிப்பட்டி, ராமசாமிப்பட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பாலும் விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலைக்காக தினமும் திருச்சுழி, ரெட்டியபட்டி சென்று வருகின்றனர்.மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் திருச்சுழி, ரெட்டியபட்டியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் டவுன்பஸ்கள் இல்லாததால் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரெட்டியபட்டியில் உள்ளது.தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், கருவூலகம் போன்ற அரசு அலுவலகம் திருச்சுழியில் உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த அலுவலகங்களுக்கு செல்ல ரெட்டியபட்டியிலிருந்து இருந்து ராமசாமி நகர் சென்று, அங்கிருந்து இரு பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இந்த பஸ்களில் சென்றால் 30 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளது.மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள ஆலடிபட்டி, கல்லுமடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ்கள் செல்வதில்லை. ராமசாமி நகர் வழியாக சென்றால் பயண நேரமும் அதிகமாகிறது. டிக்கெட் கட்டணமும் அதிகம். எனவே தமிழ்பாடி, கல்லுமடம் வழியாக ரெட்டியபட்டி-திருச்சுழி வழித்தடத்தில் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து கல்லுமடத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் கூறுகையில், ‘இந்த வழித்தடத்தில் டவுன் பஸ்கள் இல்லாததால் அவசர சிகிச்சைகாக நோயாளிகளை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. நோயாளிகளை டூவீலரில் அழைத்து செல்ல வேண்டியுள்ளது. விவசாயிகள் விளை பொருட்களை தலைச்சுமையாக தூக்கி கொண்டு பல கி.மீ. நடந்து செல்கின்றனர். எனவே ரெட்டியாபட்டியிலிருந்து இருந்து கல்லுமடம் வழியாக திருச்சுழிக்கு டவுன பஸ் இயக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: