ஆவடி, ஜன.22: ஆவடி அருகே அண்ணனூரில் டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் ஒரு கும்பல் மறைந்திருந்து கொள்ளையடிக்க திட்டம் கொண்டிருப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், பிரதீப் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனையடுத்து, 7 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து திருமுல்லைவாயில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அனைவரும் சேர்ந்து அண்ண்னூரில் உள்ள அரசு மதுபான கடையை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனர்.