ஆவடி: தமிழகத்தில் 14வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அரசு தடைவிதித்துள்ளது. இதனை அடுத்து, நேற்று ஆவடி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆவடி வருவாய் ஆய்வாளர் நடராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆவடி சி.டி.எச் சாலை, ஆவடி டேங்க் பேக்டரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், ஸ்வீட், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை செய்தனர். இதில், இரு ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அதிகாரிகள் ஓட்டல்களில் இருந்த 25 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அதிகாரிகள் அதனை பயன்படுத்திய உணவகங்களுக்கு தலா ₹2,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.