பெரம்பூர்: வடசென்னை பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், சிம்ம சொப்பணமாக விளங்குவதால் போலீசார் திணறி வருகின்றனர். வடசென்னையில் சமீப காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் மக்கள் நடமாட அச்சப்படும் நிலை உள்ளது. ஆனால், குற்றச் சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். வியாசர்பாடி சர்மா நகர் எஸ்ஏ காலனி 8வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (23). வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென மணிகண்டனை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.