தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உடலை பார்க்க சென்ற உறவினர் விபத்தில் பலி

கோவில்பட்டி,  ஜன. 22:  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த முனியசாமி மகள் ரேணுகா (25). பி.காம்., பட்டதாரி. திருமணமாகாத இவர், வானரமுட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்து விரைந்து சென்ற நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார்,  உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வானரமுட்டியை சேர்ந்தவரும் ரேணுகாவின் உறவினருமான தமிழ்ச்செல்வம் (48) என்பவர் ரேணுகாவின் உடலை பார்க்க கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வானரமுட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்காக சென்ற நாய் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதனால் நிலைகுலைந்து பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த தமிழ்ச்செல்வத்தை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்தும் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான தமிழ்ச்செல்வத்திற்கு ஜெயந்தி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். அடுத்தடுத்து இருவர் இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: