ஊட்டி, ஜன, 18: நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகள் பராமரிக்கப்படாமல் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது.பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி முக்கிய பஸ் நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகின்றன. இதில் பெரும்பான்மையான நிழற்குடைகள் முறையாக பராமரிப்பதில்லை. அவை குடிமகன்களின் கூடாரமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளன. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள பயணியர் நிழற்குடைகள் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. போதை தலைக்கேறும் ஆசாமிகள் உள்ளேயே அசுத்தம் செய்வதோடு காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை வீசி சென்று விடுகின்றனர். இவற்றோடு போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் பயணியர் நிழற்குடைகளை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.