கிருஷ்ணகிரி, ஜன.18: கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான் செரீப்(55). இவர், புதுப்பேட்டை குப்பம்ரோட்டில், மேல்தெரு பகுதியில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி, திடீரென கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த டவுன் போலீசார், உஸ்மான் செரீப்பின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து: பெங்களூரு கொரமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(47). இவர், கிருஷ்ணகிரியிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மோட்டூர் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகராஜ் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.