சிவகாசி, ஜன.18: அதிகாரிகள் அலட்சியம் காரணமாக சிவகாசி அரசு வங்கி ஏடிஎம்.கள் 3 நாட்களாக முடங்கியுள்ளது. இதனால் பணம் போட முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகாசியில் அரசுடமைக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 50க்கும் மேற்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதில் தனியார் வங்கிகள் அரசு வங்கிகளுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகின்றன. தனியார் வங்கிகள் என்னதான் சலுகை அறிவிப்பு வெளியிட்ட போதிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசுடமைக்கப்பட்ட வங்கிகளை விரும்பி கணக்கு துவங்கி பரிவர்த்தனை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை விரும்பிய போதிலும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி எடுப்பதில்லை. சமீப காலமாக அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் தனியார் வங்கிகளின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் சென்று கொண்டிருக்கின்றது. அரசுடமை வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் அலட்சியம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக சிவகாசி வேலாயுதரஸ்தா சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலும் வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலும் கடந்த 3 நாட்களாக பணம் போடும் மிஷின் பழுது ஏற்பட்டு காட்சி பொருளாக உள்ளது. பணம் போட வரும் வாடிக்கையாளர்கள் தினமும் வந்துவந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 3 நாட்களும் விடுமுறை தினம் என்பதால் பணம் போட முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனா். அவசர அவசரமாக பணம் போட நினைத்தவர்கள் மிஷின் பழுது காரணமாக அன்றாட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களாக சர்வர் பழுது தெரிந்தும் வங்கி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் நலன் கருதி பணம் போடும் மிஷினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.