தேனி, ஜன.18: தேனி மாவட்டத்தில் கள்ளமார்க்கெட்டில் டாஸ்மாக் மது விற்பனை செய்ததாக 92 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 2,833 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட கக்கன்ஜி காலனியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் ரோந்து ெசன்ற பெரியகுளம் காவல்துறையினர் அங்கு மதுபாட்டில்கள் விற்னையில் ஈடுபட்டிருந்த தனலெட்சுமி(45), விக்னேஸ்வரன்(15) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 762 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் வடகரை காவல்நிலையத்தில் மதுபாட்டில்கள் பார்வையிட்டு மற்றும் கைது செய்தவர்களை விசாரணை செய்தார்.பெரியகுளத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றும் பாண்டியன், ஆதீஸ்வரன் மற்றும் அகமலையை சேர்ந்த இளையராஜா ஆகிய 3 பேரும் மதுபானக்கடையில் இருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சோத்துப்பாறை சாலையில் மதுபாட்டில்களை கடத்தி சென்று கொண்டிருந்தனர். தகவலறிந்த தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அவர்களைக் கண்டதும் விற்பனையாளர்கள் பாண்டியன், ஆதீஸ்வரன் தப்பியோடிவிட்டனர். இளையராஜா வைத்திருந்த பைகளை சோதனையிட்ட போது அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 64 மதுபாட்டில்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கம்பம் அடுத்துள்ள சுருளிப்பட்டி சின்னவாய்க்கால் மது விற்பனை செய்த கண்ணன் (52) என்பவரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 92 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.