ராமநாதபுரம், ஜன. 18: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இடம் கிடைக்காமல் ரயில் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மதுரை, ராமேஸ்வரம் இடையே தினமும் காலை, நண்பகல், மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் சென்று திரும்புகின்றனர். பஸ் கட்டணத்தை விட ரயில்களில் குறைவான கட்டணம் என்பதால் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக விடுமுறை நாட்களில் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் நின்றுகூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக போகி, பொங்கல், மாட்டு பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை இருந்தது. நேற்று திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை தொடர்ந்த நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிமாக இருந்தது. ஒரு சிலர் டிக்கெட் எடுத்த பின்னரும் கூட்டம் காரணமாக ரயிலில் ஏற முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி பஸ்களில் சென்றனர். பலர் பார்சல் ஏற்றும் ரயில் பெட்டிகளில் தொற்றியபடி சென்றனர்.