திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு சிமென்ட் சாலைப்பணி தீவிரம்

திருவாடானை, ஜன. 18:  திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் ஒன்பதாம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் தேரோட்டம் என்ற பெயரில் மிகவும் பழமையான சப்பரம் ஒன்றில் சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெறும். இதனால் பக்தர்கள் புதிய தேர் ஒன்றை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பனிரெண்டரை கிராம் பொதுமக்களால் ரூ.50 லட்சம் செலவில் புதிய மரத்தேர் செய்யும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் வருகிற 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தேர் செல்லும் நான்கு வீதிகளில் கீழரத வீதி சிமென்ட் சாலை அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது. எனவே பொதுமக்கள் சார்பில் தேர் வெள்ளோட்டம் நடத்த ஏதுவாக கீழ ரத வீதியை சிமென்ட் சாலையா அமைக்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்காக கலெக்டர் சிறப்பு நிதியின் கீழ் ரூ.18.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: