பிரசவத்தில் பெண் சாவு தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

செம்பட்டி, ஜன. 18: நிலக்கோட்டை அருகே அப்பாவுபிள்ளைபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (30). இவரது மனைவி கீர்த்தனா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 14ம் தேதி பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்தனாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் ரத்தப்போக்கு அதிகமானதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கீர்த்தனா உயிரிழந்தார். இதையறிந்ததும் அவரது உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்ததும் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தனாவின் உறவினர்கள் நிலக்கோட்டை காவல்நிலையம், தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: