பெரம்பலூர், ஜன. 11: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கும் இந்த ரத்தசோகை நோயை தடுப்பதற்கான சத்து மாத்திரை வழங்கும் பணி துவங்கியது.பெரம்பலூர் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ரத்த சோகை நோயை தடுப்பதற்காக மாவட்ட சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டு, அவை சம்மந்தப்பட்ட பள்ளிக்கென அப்பள்ளியில் நியமிக்கப்படும் பிரத்தியேக ஆசிரியரை கொண்டு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் தமிழக அரசின் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வட்டார அளவில் உள்ள சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர் என 3 அடுக்கு நிலைகளில் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பள்ளிகளில் மொத்தமாக மாத்திரைகளை வழங்கி ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் மாணவிகளுக்கு தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கும் இந்த ரத்தசோகை நோயை தடுப்பதற்கான சத்து மாத்திரைகள் வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியது.இதன்மூலம் 400க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைவர்.