பெரம்பலூர், ஜன. 11: எல்கேஜி, யுகேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாய பணிமாறுதல் அளிக்கும் பள்ளி கல்வித்துறையை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அளவில் இயங்கி வரும் ஊராட்சி நடுநிலைப்பள்ளியோடு இணைந்துள்ள அங்கன் வாடிகளில் நர்சரி பள்ளிகளை துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளான நர்சரி பள்ளிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிய கூடியவர்களை உபரி ஆசிரியர்கள் என காரணம் கூறி புதிதாக துவங்கவுள்ள பள்ளிகளுக்கு இதுவரை நடைமுறையில் இல்லாதபடிக்கு கல்வி ஆண்டுக்கு இடையே கட்டாய மாறுதல் அளிப்பது கண்டனத்துக்குரியது.