பெரம்பலூர், ஜன. 11: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: தை பொங்கலுக்கு முதல் நாளை போகி பண்டிகையாக அறிவித்து பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவதும் வழக்கம். இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் விதமாக தங்கள் வீடுகளில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும் தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசு படுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும் ஏற்படுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986, பிரிவு(15)ன்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே போகி பண்டிகையின்போது டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவு பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமலும், கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.