முத்துப்பேட்டையில் பொங்கலுக்காக விற்பனைக்கு வந்துள்ள மஞ்சள் கொத்து

முத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை பகுதியில் சமீபத்தில் தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் பெரியளவில் பாதித்து இருந்தாலும் இப்பகுதி மக்கள், விவசாயிகள் கஷ்டங்களுடன் பொங்கலையும் வரவேற்க தயாராகி வருகின்றனர்.  பொங்கல் பண்டிகையில் கரும்போடு, மஞ்சள், இஞ்சி கொத்துகளுக்கும் முக்கிய இடமுண்டு. மங்கலப்பொருளாகவும் மருத்துவ பயனுக்கும் பயன்படும் மஞ்சளானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாயம் எடுக்கவே பயன்பட்ட மஞ்சள் கிழங்கு, பின் நாட்களில் சமையலறை, பூஜையறையை ஆக்கிரமித்தது. மஞ்சளில் பல்வேறு ரகங்கள்  பயிரிடப்படுகின்றன. இதில் ஆலப்புழை மஞ்சள் உயர்வானதாகும்.மேலும் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள், பலா மஞ்சள், காட்டுமஞ்சள், குடமஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், குரங்கு மஞ்சள் போன்றவைகளும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு தற்போது விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.முத்துப்பேட்டை பகுதிகளிலும் விற்பனைக்கு முந்திக்கொண்ட கரும்பைத்தொடர்ந்து சந்தைக்கு வந்துள்ள மஞ்சளானது சீர்வரிசை தட்டின் நடுவே ஒய்யாரமாய் இடம் பிடித்துவிடும்பொங்கல் வரிசை, முதல்சீர், மாமன்சீர் என உறவுமுறை பிணைப்புகளை உறுதிபடுத்தும் சீர்வரிசை நடைமுறையில் மஞ்சள் இன்றளவும் உயிர்ப்புடன் இடம் பெறுகிறது. தஞ்சை, கும்பகோணம், பேராவூரணி, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் கொத்துகளை பண்டிகைக்காக வியாபாரிகள் மொத்தமாக விலைபேசி வாங்கி முத்துப்பேட்டை பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்இப்பகுதி மக்களும் புயல் பாதிப்புகளையும் கடந்து ஆர்வத்துடன் மஞ்சள் கொத்துகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மஞ்சள் கொத்து வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது.இது குறித்து முத்துப்பேட்டை வியாபாரி பாலகுமார் கூறுகையில், முதலில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ள பகுதிக்கு சென்று கிழங்கின் அடர்த்தி மற்றும் தரம் பார்த்த பிறகே விலை பேசப்படும். கிழங்கின் தன்மையை பொறுத்து விலை மாறுபடும். இப்போது விற்பனைக்கு வந்துள்ள மஞ்சள் கொத்து ஜோடி ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்குவோரும் கிழங்கு மற்றும் வளர்த்தியை பார்த்துதான் வாங்குகின்றனர்.

அதனால் செழுமையான மஞ்சளை தேடிப்பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் சீர் செய்வோர் கரும்புடன் மஞ்சளையும் சேர்த்தே ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர் என்றார்.

Related Stories: