திருப்பூர்,ஜன.11: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில் ஆண்டுதோறும் 16 வயதுக்குட்பட்டோருக்கான தென்னிந்திய அளவிலான டி.எஸ்.சி. சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் இன்று (11ம் தேதி) காலை தொடங்குகிறது. அதன்படி, காலை 7.30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் திருப்பூர் மாநகரக் போலீஸ் கமிஷனர் மனோகரன், திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஈஸ்ட்மேன் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியை துவக்கி வைக்க உள்ளனர்.
இந்த தொடரில் ’ஏ’ பிரிவில் கர்நாடகா சி.ஜி. ஹப் ஆப் கிரிக்கெட், தமிழ்நாடு எலைட் கிரிக்கெட் அகாடமி, கேரளா ஆத்ரேயா கிரிக்கெட் அகாடமி, தமிழ்நாடு திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் ஆகிய 4 அணிகளும், ’பி’ பிரிவில் கேரளா திரிபுனித்ரா கிரிக்கெட் கிளப், கர்நாடகா தேவ் இன் கிரிக்கெட் அகாடமி, பாண்டிச்சேரி சுபுஸ் கிரிக்கெட் அகாடமி, ஆந்திரா அனந்தபூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆகிய 4 அணிகள் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றது. இன்று தொடங்கி 12ம் தேதி வரை, ‘ஏ’பிரிவு அணிகளுக்கான லீக் ஆட்டங்களும், 13-ம்தேதி முதல் 15-ம்தேதி வரை ’பி’ பிரிவு அணிகளுக்கான லீக் ஆட்டங்களும் நடைபெறும். 16-ம்தேதி அரையிறுதிப் போட்டியும், 17-ம்தேதி இறுதி போட்டியும், அன்று மாலை பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. போட்டிகள் தினமும் காலை 8 மணிக்கு ஒரு போட்டியும், மதியம் 1 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெறும்.