காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் ஜல்லிக்கட்டிற்கு தடை பழநி சப்கலெக்டர் எச்சரிக்கை

பழநி, ஜன. 11: காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்படுமென ஆலோசனை கூட்டத்தில் பழநி சப்கலெக்டர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் காளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பழநி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. சப்கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகிக்க, தாசில்தார் சரவணக்குமார், டிஎஸ்பி விவேகானந்தன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்காக என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனையை எவ்வாறு செய்ய வேண்டும். வாடிவாசலுக்கு காளைகளை கொண்டு செல்லும் வழி, வெளியேறும் வழி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் இருக்கைகள், மேற்கூரை எவ்வாறு செய்ய வேண்டும் என விவாதம் நடந்தது.

தொடர்ந்து சப்கலெக்டர் பேசுகையில், ‘‘வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையின் திமிலை பிடிக்கும் வீரர் அது 3 முறை குதித்த பிறகும் விடவில்லை என்றால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்கமருந்தோ அல்லது அவற்றுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் மருந்துகளோ கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக போட்டி நடத்த தடை விதிக்கப்படும். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் தேங்காய் நார்கள் பரப்பியிருக்க வேண்டும். காளைகளை அடக்கும் வீரர்கள் மது, போதை வஸ்துகளை உபயோகிக்க கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த வீரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’’ என்றார்.கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பேசுகையில், ‘‘போட்டி தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு காளைகள் அனைத்தும் வாடிவாசல் பகுதிக்கு கொண்டு வரப்பட வேண்டும். முன்னதாக காளைகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். காளைகளுக்கு எந்தவித ஊக்க மருந்தும் கொடுக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வாடிவாசலுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

Related Stories: