கிணற்றில் குதித்தார் பொங்கல் பரிசு பணத்தை தர மனைவி மறுத்ததால் கொத்தனார் தற்கொலை

சுசீந்திரம், ஜன.11: நாகர்கோவில்  அருகே ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு பணம் ஆயிரம் ரூபாயை தர மனைவி   மறுத்ததால் மனம் உடைந்த கொத்தனார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொண்டார். குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள கொடிக்கால் காலனியை  சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவரது மனைவி ஜெயா (39). இந்த தம்பதிக்கு ஒரு  மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது என்ஜிஓ காலனி அருகே குஞ்சன்விளையில்  வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விஜயகுமாருக்கு  குடிபழக்கம் இருப்பதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை  என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயா ரேஷன்  கடைக்கு சென்று பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 வாங்கி  வந்துள்ளார். இதை அறிந்த விஜயகுமார் மனைவியிடம், பொங்கல் பரிசு பொருளுடன்  கிடைத்த ஆயிரம் ரூபாயை தனக்கு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் ஜெயா  கொடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து மனைவியை அவர் சரமாரியாக தாக்கியதாக  தெரிகிறது.

இதில் காயம் அடைந்த ஜெயா மருத்துவமனைக்கு செல்வதாக கூறி  வெளியே சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் வீட்டின் எதிரே உள்ள  80 அடி ஆழ கிணற்றில் குதித்தார். இதனை கண்ட அவரது மகன் அப்பாவை  காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டான் அவனது சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். கிணறு ஆழமாக இருந்ததால் நாகர்கோவில்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து கிணற்றில் இறங்கி விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு  பிறகு நேற்று அதிகாலை விஜயகுமார் உடலை தீயணைப்புதுறையினர் மீட்டனர். இந்த  தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை  நடத்தினர்.

அதைத் தொடர்ந்து விஜயகுமாரின் உடலை போலீசார் பிரேத  பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல்  பரிசு பணம் ₹1000ஐ மனைவி தர மறுத்ததால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: