கெங்கவல்லி, ஜன.10: கெங்கவல்லி அருகே லாரி மோதிய விபத்தில் ஊராட்சி ஊழியர் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே, இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காசி(45). இவர் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை(43). இவர்களுக்கு கார்த்தி(20), கவுதம்(18), கோகுல்(16) என்ற மகன்கள் உள்ளனர். நேற்று மாலை, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1000 பணம் வாங்குவதற்காக, இலுப்பநத்தம் பகுதியில் உள்ள ேரஷன் கடைக்கு சென்றார். சுமார் 5 மணி நேர காத்திருப்புக்கு பின், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொண்டு, தன்னுடைய வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில், தலைவாசல்-வீரகனூர் நெடுஞ்சாலையை கடந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.