குமாரபாளையம், ஜன.10: பொங்கல் பொருட்கள் விநியோகிக்கும் ரேஷன் கடைகள் முன், அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, அக்கட்சியினர் பேனர் வைத்ததற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 19 ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளின் முன்பு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் அதிமுகவினர் பேனர் வைத்து உள்ளனர். இந்த பேனர்களில் தமிழக அரசு என்பதற்கு பதிலாக, அதிமுக அரசு என்றும் அக்கட்சியின் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த பேனருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.