ரேஷன் கடைகள் முன் அதிமுகவினர் வைத்த பேனர் அகற்றம் திமுகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை

குமாரபாளையம், ஜன.10:  பொங்கல் பொருட்கள் விநியோகிக்கும் ரேஷன் கடைகள் முன், அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, அக்கட்சியினர் பேனர் வைத்ததற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 19 ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளின் முன்பு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் அதிமுகவினர் பேனர் வைத்து உள்ளனர். இந்த பேனர்களில் தமிழக அரசு என்பதற்கு பதிலாக, அதிமுக அரசு என்றும் அக்கட்சியின் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த பேனருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரேஷன் கடையில் கட்சி சார்புடன் நடந்து கொள்வது தவறு என ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களிடம் திமுகவினர் குற்றம்சாட்டினர். அதற்கு  கடையின் விற்பனையாளர்கள், தங்களிடம் ₹450 பெற்றுக்கொண்டு, அதிமுக நிர்வாகிகளே இந்த நன்றி அறிவிப்பு பேனர் வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து திமுக நிர்வாகிகள் மாவட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். இதை தொடர்ந்து அந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

Related Stories: