தர்மபுரி, ஜன.10: தர்மபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில், இருசக்கர வாகனங்கள் பெற தகுதியுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில், மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19ம் ஆண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் உள்ள ஆண்டு வருமானம் ₹2.5 லட்சம் மட்டும் உள்ள மகளிர், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், அரசு திட்டங்களில் பணிபுரிபவர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம், ஆஷா பணியாளர்கள் மற்றும் பிற சிபிஓ ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்படி திட்டத்திற்கான விண்ணப்பங்களை, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தர்மபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும், வரும் 18ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை www.dharmapuri.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.