பழநி, ஜன. 9: பழநி கோயிலில் வரும்15ம் தேதி தைப்பூச திருவிழா கொடிஏற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர். இதனையடுத்து பழநி நகரில் சுகாதாரம் பேணிகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு, பக்தர்களின் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர் நாராயணன் தலைமை வகிக்க ஓட்டல், பேக்கரி, உணவகங்கள், தங்கும் விடுதி ஆகியவற்றின் உரிமையாளர்கள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஓட்டல்களில் கட்டாயம் உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும், கைகழுவும் இடத்தில் கிருமிநாசினி வைக்க வேண்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுக்கள், கேரி பைகள், டம்ளர்களை உபயோகப்படுத்தக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், காலாவதி ஆகும் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பே அந்த பொருட்களை திருப்பி கொடுத்து விடவேண்டும், குப்பைகளை தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை மீறுபவர்கள் மீது நகராட்சி சார்பில் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். மேலும் சுகாதாரஆய்வாளர்கள், அதிகாரிகள்தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.