ஆத்தூர், ஜன.9: ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து, ஆத்தூரில் மருந்து விற்பனையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை கடைவீதி தபால் அலுவலகம் முன் ஆத்தூர், கெங்கவல்லி தாலுகா மருந்து வணிகர் சங்கம் சார்பில், ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்யக்கோரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர் தாலுகா தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கெங்கவல்லி தாலுகா தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மூத்த நிர்வாகிகள் ஜெயராமன், சீனிவாசன், செந்தில்குமார், வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற மருந்து விற்பனையாளர்கள், கோரிக்கையை அடங்கிய மனுவை தாசில்தார் செல்வனிடம் அளித்தனர்.