திருவண்ணாமலை, ஜன.4: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு முழுவதம் 12 ஆயிரம் வருவாய்த்துறையினர் பங்கேற்க உள்ளனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் தேசிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.இந்த போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கம் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலையில் நேற்று சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கூறியதாவது:வருவாய்த்துறையினருக்கு பணிச்சுமை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 11,500 காலிப்பணியிடங்கள் நிரப்பவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டங்களின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேறவில்லை.