ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி அதிரடி நடவடிக்கை
ஜெயங்கொண்டம், ஜன.3: ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்ததன் எதிரொலியாக ஜெயங்கொண்டம் பகுதிகளில் பொதுமக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. அதிக அளவில் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாததால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது எப்போதும் போல கேரி பேக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே சென்று வருகின்றனர். தற்போது கடைகளில் கேரிபேக் கொடுப்பதில்லை. ஒரு சில பெட்டிக்கடை பொரி கடலை விற்பனை கடைகளில் பேப்பரால் செய்யப்பட்ட காகித பைகள் தயார் செய்யப்பட்டு அதில் பொரிகடலை மற்றும் பொருட்கள் வழங்கி விடுகின்றனர். ஆனால், பிரபல ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் இன்னும் கட்டபை மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட துறைகளிலும் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் உள்ள கடைகள் சிதம்பரம் சாலை, விருத்தாசலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள் மொத்த விற்பனை கடை மற்றும் பிரபல ஜவுளி கடையில் ஆய்வு செய்து அங்கிருந்த கேரிபேக் மற்றும் கட்டை பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கட்டைகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும்.
நகராட்சி ஆணையர் (பொ) மற்றும் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தி மேலும் இது போன்ற பைகள் வழங்கினால் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். மேலும் இது போன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.