திருவாரூர், டிச.12: கற்பக நாதர் குளம் காலனிக்கு பகுதிக்கு நிரந்தர சுனாமி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் ஊராட்சிக் குட்பட்ட கற்பகநாதர் குளம் காலனி, இடும்பாவனம் காலனி ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் ஊராட்சிக் குட்பட்ட கற்பகநாதர் குளம் காலனி, இடும்பாவனம் காலனி ஆகிய இரு கிராமங்களில் சுமார் 1200க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் வசிக்கிறோம்.கடந்த மாதம் 15ம் தேதி வீசிய கஜா புயலால் தங்களின் குடிசை வீடுகளும் தரை மட்டம் ஆகிவிட்டதால் கிராம மக்கள் அனைவரும் கற்பகநாதர் குளம் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரசின் சார்பில் அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு முகாமில் தங்கியுள்ளோம். மேலும் தற்போது முகாம் அமைக்கப்பட்ட பள்ளியில் வகுப்புகள் நடைபெறுவதால் பகல் நேரங்களில் சாலையோரங்களில் தங்கி விட்டு இரவு நேரங்களில் மட்டும் அப்பள்ளியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.