ஆர்.எஸ்.மங்கலம், டிச. 11: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பாக ஆனந்தூரில் வட்டார தலைவர் போஸ் தலைமையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் வட்டார துணை செயலாளர் பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பாக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் முறையான மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும். 2013ம் ஆண்டு முதல் ஆன்லைன் சான்றிதழ்கள் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காரணத்தால் இணையதளத்தில் வழங்கக் கூடிய சான்றுகளை சரி பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான உபகரணங்களான கம்ப்யூட்டர், அதற்கு தேவையான இன்டர்நெட் வசதி செய்து தரக்கோரியும், பட்டா மாறுதல் விஷயங்களில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.