மதுரை, டிச. 11: ஜல்லிக்கட்டில் பேட்ஜ் முறையை அகற்றி அனைவரும் களத்தில் இறங்கி மாடுபிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாவட்ட செயலாளர் வினோத் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு, மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் பேட்ஜ் முறையில், வீரர்கள் மாடுபிடிக்க களம் இறக்கப்படுகின்றனர். இதனால் ஒரு வீரர் ஒவ்வொரு பேட்ஜிலும் கட்டாயம் மாடுபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் எல்லா மாடுகளையும் பிடிப்பதால், வீரருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே பேட்ஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வீரர்களையும் களத்தில் இறக்கிவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.