திருப்பூர், டிச.11: திண்டுக்கல் நிலக்கோட்டை பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (22). அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்த் (22). சதீஸ்குமார் (20). இவர்கள் 3 பேரும் திருப்பூர் டி.கே.டி. மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பனியன் நிறுவன தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரவிச்சந்திரன், தனது நண்பர்கள் அரவிந்த், சதீஸ்குமாருடன் பைக்கில் மேட்டுப்பாளைத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயா பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரவிந்த், சதீஸ்குமார் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் வீரபாண்டி போலீசார் வால்பாரை அய்யர்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் (47) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.