திருப்பூர், டிச.11: திருப்பூர் அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம், புதூர், பெரியார் காலனி, கவிதாலட்சுமி நகர் பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம் வாரசந்தை, பெரியார் காலனி பகுதிகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளன. இந்த இறைச்சிக்கடைகளில் இருந்து தூக்கி வீசப்படும் கழிவுகளை சாப்பிட, ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு பொதுமக்களை கடிக்க ஓடி வருகின்றன. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு, பொதுமக்கள் சார்பில், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.